அரசாங்கத்தின் மொத்த செலவு 47,943 கோடியால் அதிகரிப்பு !

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலத்தின்படி, இந்த வருட அரசாங்கத்தின் மொத்தச் செலவு 47 ஆயிரத்து தொள்ளாயிரத்து 43 கோடி ரூபாயால் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டுக்காக, கடந்த நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, மொத்தச் செலவு, 2 இலட்சத்து ஒன்பதாயிரத்து 664 கோடியே 65 இலட்சத்து 58 ஆயிரமாகும்.

இருப்பினும் திருத்தச் சட்டமூலத்தின்படி மொத்தச் செலவு 3 இலட்சத்து 27 ஆயிரத்து 587 கோடியே அறுபத்தைந்து இலட்சத்து 58 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதில் பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கே அதிகளவாக எழுபத்து மூவாயிரத்து நானூற்று அறுபத்தெட்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு ஆயிரத்து 344 கோடியே 51 இலட்சம் ரூபாயும் அதற்கு அடுத்ததாக நிதி அமைச்சுக்கு 46 ஆயிரத்து 720 கோடி ரூபாயும் பாதுகாப்பு அமைச்சுக்கு முப்பத்தேழாயிரத்து அறுநூற்று முப்பத்திரண்டு கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சுக்கு இருபதாயிரம் கோடி ரூபாயும் சுகாதார அமைச்சுக்கு 24 ஆயிரத்து 807 கோடி ரூபாயும் வர்த்தக அமைச்சுக்கு 937 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சுக்கு 37 ஆயிரத்து எழுநூற்று பத்து கோடி ரூபாயும் விவசாய அமைச்சுக்கு 13 ஆயிரத்து 856 கோடி ரூபாயும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு இரண்டாயிரத்து எழுநூற்று அறுபத்தேழு கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.