ஊடகவியலாளர் சக்திவேலின் உருவாக்கத்தில் களுமுந்தன்வெளி முத்துமாரியம்மன்  பக்தி கீர்த்தனை இறுவெட்டு வெளியீட்டு விழா

மட்டக்களப்பு – களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவை முன்னிட்டு களுமுந்தன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் மீது பாடலாசிரியரும், ஊடகவியலாளருமான வ. சக்திவேலின் உருவாக்கத்தில் பாடப்பட்ட இறுவெட்டு வெளியீட்டு விழாவானது ஏதிர்வரும் வியாழக்கிழமை 07.07.2022 திகதி காலை 9.00 மணியளவில் மிகச்சிறப்பான முறையில் இடம்பெறவுள்ளது.

களுமுந்தன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் விநாயகர் கலைக்கழகத்தின் தலைவரும்  ஆசிரியருமான மு.சவுந்தரராசன் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன், குறித்த நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக களுமுந்தன்வெளி மாணிக்கப் பிள்ளையார் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களின் பிரதம குரு சிவஸ்ரீ. த.கு.திருச்செல்வம் குருக்கள் அவர்களும், பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகம் – சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் கற்புல தொழில்நுட்பத்துறையின் தலைவர் கலாநிதி.சு.சிவரெத்தினம் அவர்களும், சிறப்பு அதிதிகளாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி க. புவனேந்திரநாதன், களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்தின் அதிபர் நா. ராமேஸ்வரன் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஆ.பிரபாகரன் ஆகியோரும், விசேட மற்றும் கௌரவ அதிதிகளாக மேலும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

விநாயகர் கலைக்கழகத்தின் உபதலைவரும் ஆசிரியருமான ந. தரணிதரனின் வரவேற்புரையினைத் தொடர்ந்து இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பிற்கான தலைவர் த.வசந்தராஜா அவர்களினால் இறுவெட்டானது வெளியீட்டு வைக்கப்படவுள்ளதுடன், இறுவெட்டின் முதற் பிரதியினை மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும் மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் ஆலோசகருமான தேசபந்து எம்.செல்வராஜா அவர்கள்
பெற்றுக்கொள்ளவுள்ளமை சிறப்பம்சமாகும்.

கவிஞர் த.பேரின்பராசாவின் நயவுரையினை தொடர்ந்து அதிதிகள் உரை இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து
பாடலாசிரியரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான வ.சக்திவேல் அவர்களின் ஏற்புரையுடன், விநாயகர் கலைக்கழகத்தின் செயலாளர் யோ. கிவேதன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடையவுள்ளது.

குறித்த இறுவெட்டிற்கு கிழக்கிலங்கையின் புகழ்பூத்த இசையமைப்பாளர் நிஸ்கமானந்தராஜா டனூஷ்ஷியன் இசையமைத்துள்ளதுடன், இலங்கை வானொலி தேசிய கலைஞரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான கலைச்சுடர் வீ.பத்மசிறி மற்றும் புகழ்பூத்த பாடகி செல்வி சுலக்ஷனி புவனேந்திரராசா ஆகியோர் இணைந்து குறித்த பக்தி கீர்த்தனை பாமாலையினை பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.