கிண்ணியா தள வைத்தியசாலையில் ஒரு வருடமாக சத்திர சிகிச்சை வைத்தியர்(sergean) இல்லாமை பெறும் கவலை அளிக்கிறது – கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம். எம் .நஸ்ருதீன்.

(ஹஸ்பர்)

கிண்ணியா தள வைத்தியசாலை பல்வேறு பௌதீக வளம் வைத்தியர் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் பற்றாக்குறைவுடன் இயங்கி வருகின்றது.

இச்சந்தர்ப்பத்தில் இவ் வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த சத்திர சிகிச்சை வைத்தியர் 2021 07. 21 ஆம் தேதி வைத்தியசாலையில் இருந்து எவ்வித பதிலும் இன்றி உயர் கல்விக்காக விடுவிப்புச் செய்யப்பபட்டுள்ளார்.

அன்றிலிருந்து இற்றை வரைக்கும் சுமார் ஒரு வருட காலமாக சத்திர சிகிச்சை வைத்தியர் நியமிக்கப்படாமை மிகப் பெரிய கவலைய ளிக்கும் செயலாகும் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.நசுருதீன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (05) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

அதே நேரம் இதை ஒரு புறக்கணிப்பாக கூட பார்ப்பதற்கு வாய்ப்பு உள்ளது . சத்திர சிகிச்சை வைத்தியர் ஒருவரை நியமித்து தருகிறோம் என உரிய அதிகாரிகள் பலமுறை வாக்குறுதி அளித்தும் கால இழுத்தடிப்பு செய்யப்பட்டே வந்துள்ளது.

காலடியில் சிகிச்சை பெற்று வந்த கிண்ணியா மக்கள் இன்று சத்திர சிகிச்சைக்காக 15 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மூதூர் வைத்தியசாலை 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள திருகோணமலை பொது வைத்திய சாலைகளுக்கு பல ஆயிரம் ரூபாய்கள் செலவழித்து செல்ல வேண்டிய ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தற்போது எமது நாடும் நாட்டு மக்களும் முகம் கொடுத்துள்ள பாரிய பொருளாதார நெருக்கடி தாங்க முடியாத வாழ்க்கைச் செலவு எரிபொருள் தட்டுப்பாடு இவைகளுக்கு மத்தியில் கிண்ணியாவில் இருந்து திருகோணமலை மூதூர் வைத்தியசாலைகளுக்கும் சத்திர சிகிச்சைக்காக சென்று வருவது என்பது மிகப் பெரிய சவாலாக மாறி உள்ளது.

போக்குவரத்து சீராக இடம்பெறாமை வாடகைக்கு வாகனங்களை பெற்றுக் கொள்ள முடியாத இந்நிலையில் நோயாளிகள் உரிய நேரத்துக்கு சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமைக்கு முகம் கொடுப்பதோடு மேலும் அவர்களது நோய் அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

மாதாந்தம் சத்திரசிகிச்சை கிளினிக் நோயாளிகளுக்கான சிகிச்சைகளை கிண்ணியா வைத்திய சாலையில் கடமையாற்றும் ஏனைய வைத்தியர்களால் வழங்கப்படும் நிலைமையே காணப்படுகின்றது.

தற்போது மக்கள் முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு இனிமேலும் தாமதிக்காமல் கால இழுத்தடிப்புகளை செய்யாமல் மக்களின் நலனுக்காக உடனடியாக ஒரு சத்திர சிகிச்சை வைத்தியரை நியமிப்பதற்கு கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆளுநர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோர்கள் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் சார்பாக மக்கள் பிரதிநிதி என்ற வகையில் கேட்டுக்கொள்கின்றேன்.