மேற்கத்திய நாடுகளுக்கு புடின் விடுத்துள்ள எச்சரிக்கை

மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை அறிவித்து, மொஸ்கோவிலிருந்து எண்ணெய் இறக்குமதியைத் திசைதிருப்ப முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கலை மேற்கத்திய நாடுகள் பல ஆண்டுகளுக்கு முழுமையாகத் துண்டிக்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்ய மன்னர் பீட்டர் தி கிரேட் அவர்களின் 350 வது பிறந்தநாளை முன்னிட்டு மொஸ்கோவில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொண்ட பின்னர் ரஷ்ய அதிபர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. எனவே ரஷ்ய வணிகம் நிச்சயமாக ரஷ்யாவின் எண்ணெய் கிணறுகளை மூடும் அளவுக்கு மோசமாகாது என்று அவர் கூறியதாக பிபிசி தெரிவித்துள்ளது.

எரிசக்தி மீதான ரஷ்ய இலாபங்கள் போருக்கு முன்பு இருந்ததை விட இப்போது அதிகமாகி இருக்கலாம் என்று ஒரு அமெரிக்க அதிகாரி ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

முன்னதாக, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய ஒப்புக்கொண்டன. மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்காக அந்நாட்டை தண்டிக்க பொருளாதாரத் தடைகளையும் விதித்தன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அந்த நடவடிக்கைகள் ரஷ்ய புதைபடிவ எரிபொருட்களின் உலகளாவிய வர்த்தகத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தினாலும், அவை எண்ணெய் மற்றும் எரிவாயுவின் உலகளாவிய விலைகளை உயர்த்த உதவியாக இருந்தன.

ஐரோப்பிய ஒன்றியம் தற்போது ரஷ்யாவிலிருந்து 40 சதவீத எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ரஷ்ய எண்ணெயைச் சார்ந்திருப்பதை 90 சதவிகிதம் குறைக்கவிருப்பதாக இந்த கூட்டமைப்பு உறுதியளித்துள்ளது.

எனினும், இதுவரை எரிவாயு குறித்த எந்த உறுதிமொழியும் ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் செய்யப்படவில்லை.

“உலக சந்தையில் எண்ணெயின் அளவு குறைந்து வருகிறது. விலைகள் அதிகரித்து வருகின்றன” என்று இளம் தொழில்முனைவோர் குழுவிடம் ரஷ்ய அதிபர் புடின் கூறினார். “ரஷ்ய நிறுவனங்களில் இலாபம் அதிகரித்து வருகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.