இது இருட்டை நோக்கிச் செல்கிறது;  ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும்; சஜித் தெரிவிப்பு.

இந்த ஜனாதிபதி அல்லது பிரதமரின் கீழ் நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும், இது வெளிச்சத்திற்கு பதிலாக இருளை நோக்கியே செல்கிறது, எனவே புதிய அரசாங்கத்தை அமைக்க மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாளை அல்லது அண்மித்த தினமொன்றை வழங்குமாறுக் கோரிய எதிர்க்கட்சித் தலைவர், புதிய பிரதி சபாநாயகரை உடனடியாக நியமிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
நியாயமான வரிக் கொள்கை பற்றி எனக்கூறும் போது கைதட்டுபவர்கள், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் கொண்டு வந்த கோடீஸ்வரர்களுக்கு வரிச்சலுகை வழங்கும்போதும் கைதட்டுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கோடிக்கணக்கான டொலரை நாட்டுக்கு இழக்கச் செய்த பண்டோரா திருடர்களிடமிருந்து உடனடியாக பணத்தை மீட்குமாறுக் கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர், நலன்புரித் திட்டங்களுக்கு அரசாங்கம் கொள்ளையடிக்க வேண்டாம் எனவும் , 2015 ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கியது தவறு என அரசாங்கம் கூறுவதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறி எதிர்க்கட்சித் தலைவர், சம்பள உயர்வால் அரசுக்கு வருமானம் இழக்காது எனவும் தெரிவித்தார்.

இன்றைய(04) நாடாளுமன்ற அமர்விலயே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்தின் 30 மாத கால தாமத செயற்பாடுகளினாலேயே நாடு இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இன்றாவது உலக நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்குமாறும் கூறினார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை பெற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை எனக் கூறி எதிர்க்கட்சித் தலைவர், நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் மக்களுக்காக முன்னிற்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.