“படைப்பாக்க ஆளுமைகள்” நூல் வெளியீடு; பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி பங்கேற்பு

(ஹஸ்பர்)

நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் பல்துறைப் படைப்பாளி பா.மோகனதாஸ் எழுதிய படைப்பாக்க ஆளுமைகள் ( நேர்காணல்கள் ) எனும் நூல் வெளியீடு திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் (05) சனிக்கிழமை இடம்பெற்றது.

கவிஞர். எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமையிலான இந்நிகழ்வில், தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி பிரதம அதிதியாகவும் ,திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை உபதவிசாளர் முகமட் நெளபர் சிறப்பு அதிதியாகவும் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் வீ.கோணேஸ்வரன் கெளரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதன் வரவேற்புரையினையும் திருகோணமலை பத்திரகாளியம்பாள் ஆலய தேவஸ்தான குரு வேதாகமமாமணி பிரம்மஸ்ரீ சோ. இரவிச்சந்திரக் குருக்கள் ஆசியுரையினையும், முதற்பிரதியினையும் பெற்றார்.

கவிஞர் க.யோகானந்தன் மற்றும் கவிஞையும் ஆசிரியருமான செ.சந்திரகலா ஆகியோர்
நூல் நயத்தினையும் ஏற்புரையினை நூலாசிரியரும் நன்றியுரையினை இளம் ஊடகவியலாளர் ஆர்.சமிராவும் ஆற்றினர்.

இந்நூல், ஈழத்து இலக்கிய வரலாற்றில் அதிக ஆளுமையாளர்களின் (73) அனுபவங்களை பேசும் முதல் நேர்காணல் நூலாகவும் அவசியமானதொரு புது வரவாகவும் விளங்குகின்றதென்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நூலாசிரியரை பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி பொன்னாடை போர்த்தி இதன் போது கௌரவித்தார்.இவ் நூல் வெளியீட்டு நிகழ்வில் ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.