திருமலையில் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்து போராட்டம்

(பைஷல் இஸ்மாயில்)

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றுக்கொள்ளும் போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்தப் போராட்டம் நேற்று சனிக்கிழமை திருகோணமலை சிவன் ஆலயத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் தலைவர் எஸ்.தர்ஷன் தலைமையில் இடம்பெற்ற கையெழுத்து சேகரிக்கும் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், கலையரசன் உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் மதத் தலைவர்கள், பொதுமக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அதிகளவில் ஒன்று கூடி பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவணத்தில் கையொப்பமிட்டிருந்தனர்.