20 இலட்சம் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட நிரந்தரக் கட்டடம்

(ஏறாவூர் நிருபர் -நாஸர்)

‘சபிரிகம” தேசிய திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு ஏறாவூர் -06 கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கென சுமார் இருபது இலட்சம் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட நிரந்தரக்கட்டடம் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
ஏறாவூர் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.

ஆர். றிக்னாஸ் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி சாபிறா வசிம் , பிரதேச திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் ஏஎச். சிகானா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கடந்த சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் இக்கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கென நிரந்தரக் கட்டடமொன்று அமைக்கப்படாதிருந்ததனால் இப்பிரதேச மக்களின் பொதுவான தேவைகளை நிறைவேற்றுவதில் பல்வேறு சிரமங்கள் எதிர்நோக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திறப்புவிழா நிகழ்வின்போது கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றிய சிறுவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.