சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவியந்திரம் மீது துப்பாக்கிப் பிரயோகம்

(த.சுபேசன்)

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெற்பேலி களப்புப் பகுதியில் 25/01 செவ்வாய்க்கிழமை காலை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவியந்திரத்தின் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது இராணுவத்தினரின் சைகையை மீறி மணல் கடத்தல்காரர் தப்பித்துச் செல்ல முற்பட்ட வேளையில் உழவியந்திரத்தின் சக்கரங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது மணல் கடத்தலில் ஈடுபட்ட பாலாவி வடக்கு பகுதியைச் சேர்ந்த 24வயதான இளைஞன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதுடன்,மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உழவியந்திரமும் கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.