பரீட்சைக் கடமைகளிலும் அரசியல் தலையீடு; இந்த அரசின் கேவலமான செயல் என்கிறார் இம்ரான் எம்.பி

(ஹஸ்பர்)

சுயாதீனமாக செயற்பட வேண்டிய பரீட்சைக் கடமை நியமனங்களிலும் அரசியல் தலையீடு இடம்பெறுவது இந்த அரசின் கேவலமான செயல்களில் ஒன்றாகும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு நேற்று (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

திருகோணமலை மாவட்டத்தில் 5ஆம் தர மற்றும் உயர்தரப் பரீட்சைக்கடமைக்காக நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நியமனங்களில் வழமைக்கு மாறாக இனரீதியான புறக்கணிப்புகள் இடம்பெற்றுள்ளதாக அதிபர், ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த பரீட்சைக் கடமை நியமனங்களில் வழமையாகப் பின்பற்றப்பட்டு வந்த இனச்சமநிலை பின்பற்றப்பட வில்லை. முஸ்லிம் அதிபர், ஆசிரியர்கள் இம்முறை பரீட்சைக் கடமைகளில் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

பரீட்சைக் கடமை வழங்கப்பட்ட கிண்ணியா, மூதூர், தோப்பூர் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் புல்மோட்டை, கோமரங்கடவெல போன்ற தூரப் பிரதேசங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை, குச்சவெளி போன்ற பிரதேசத்தவர்களே வழமையாக இப்பகுதி பரீட்சைக் கடமைக்கு நியமிக்கப்பட்டனர். இம்முறை சிரமப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நிலை திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வழமையாக வலயக் கல்விப் பணிப்பாளர்களினால் வழங்கப்படும் பெயர் பட்டியல்களிலிருந்தே பரீட்சைக் கடமை நியமனங்கள் செய்யப்பட்டன. இவ்வாறு செய்தவதனூடாக சிரேஸ்டத்துவம், தகைமை என்பன கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கும். இம்முறை இந்த நிலை பின்பற்றப்படவில்லை. வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பெயர் பட்டியலுக்கு வெளியே நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் ரீதியாக வழங்கப்பட்ட பெயர்ப் பட்டியலிலிருந்தே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றனது.

அதிபர், ஆசிரியர்களின் சிரேஸ்டத்துவம் கவனத்தில் கொள்ளப்படாமல் முதலாந்தர அதிபர் ஆசிரியர்கள் உதவி மேற்பார்வையாளர்களாக இம்முறை நியமிக்கப்பட்டுள்ளனர். வழங்கப்பட்ட நிமயனக் கடிதங்களில் கூட பெயர், தரம், பாடசாலை என்பன சரியாகக் குறிப்பிடப்படாது பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கலந்து கொண்டோரிடமிருந்து ஒப்பம் பெறப்பட்ட போது பரீட்சை நிலையமோ மேற்பார்வையாளர், உதவி மேற்பார்வையாளர் பெயர்களோ குறிப்பிடப்படாது ஒப்பங்கள் பெறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

பரீட்சைக் கடமை தொடர்பாக தெளிவு படுத்தும் கூட்டம் பகல் 12.00 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் மாலை 5.00 வரை அது நடத்தப்பட்டுள்ளது. கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவு கூட வழங்கப்படவில்லை. இக்கூட்டத்தில் வைத்தும் நியமனங்களில் விருப்பு வெறுப்புகள் காட்டப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட்டதாக கலந்து கொண்டோர் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆளுநர் செயலகத்தில் இருந்து வந்த அறிவுறுத்தல்களுக்கமைய பரீட்சைக்கான பிராந்திய இணைப்பாளர் செயற்பட்டதாலேயே இவ்வாறான குறைபாடுகள் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் பரீட்சைக்கடமைகளில் இனரீதியான புறக்கணிப்புகள் இடம்பெற்றாலும் 20ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்து, வரவு செலவுத்திட்டம், போர்ட் சிட்டி சட்ட மூலம் என பல விடயங்களில் அரசுக்கு ஆதரவாக இருந்து வரும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இந்த விடயம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் இந்த விடயம் குறித்து எதுவித நடவடிக்கையும் தங்களால் எடுக்க முடியாது என கை விரித்ததாக சில அதிபர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நேர்மையாக நடக்கவேண்டிய பரீட்சைக் கடமைகளில் இவ்வாறான தலையீடுகளும், இனரீதியான புறக்கணிப்புகளும் இடம்பெற்றால் பரீட்சைத் திணைக்களத்தின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகிவிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.