எதிர்வரும் நாட்களில் எரிபொருளுக்காக அதிகளவில் செலவிட நேரிடும்; கபீர்ஹாசிம்

நாட்டுக்கு எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களைப் பெற்றுக் கொள்ளும்போது சர்வதேச விலையை விடவும் அதிக தொகை செலுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து
அதன் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர்ஹாசிம் இதனைத் தெரிவித்தார்.

நாணயக் கடிதங்கள் வழங்கப்படாமையினால் கொழும்பு துறைமுகத்தில் உள்ள
இரண்டு எரிபொருள் கப்பல்களுக்குத் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டிய
நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் கட்டணம் செலுத்தப்படும்வரை நாட்டுக்கு மருந்து பொருட்களை
விநியோகிக்கப் போவதில்லையென சில இந்திய மருந்து நிறுவனங்கள்
அறிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம்
குறிப்பிட்டார்.

துறைமுகத்திற்கு வெளியே இரண்டு கப்பல்கள் எரிபொருளை இறக்க
முடியாமல் உள்ளன. டொலர் பற்றாக்குறை காரணமாக இந்த நிலை
ஏற்பட்டுள்ளது.

டொலர் கையிருப்பில் உள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட்
கப்ரால் கூறுகின்றார். அவ்வாறாயின் ஏன் குறித்த கப்பல்களில் உள்ள
எரிபொருளை இறக்க முடியாமல் உள்ளது.

எனவே, குறித்த கப்பல் நிறுவனங்களிடம் மீண்டும் இலங்கைக்கு
எரிபொருளைக் கோரும்போது அதிக அளவில் கட்டணங்கள் அறவிடப்படும்.
இலங்கைக்கு எரிபொருட்களைக் கொண்டு வருவதற்கான செலவு அதிகரிப்பதன்
காரணமாக அவர்கள் கட்டணத்தை அதிகரிப்பர்.

இதன் காரணமாகச் சர்வதேச விலையை விடவும் அதிக விலைக்கு நாட்டுக்கு
எரிபொருளைக் கொண்டு வர நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் கபீர்
ஹஷீம் தெரிவித்துள்ளார்.