இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புகின்ற விடயம் அரசியல் வங்குரோத்து தனமாகும்

(பாறுக் ஷிஹான்)

மக்களை மூளைச்சலவை செய்யும் நோக்குடனும் தமது அரசியல் வங்குரோத்து தனத்தினை மீளவும் சரி செய்வதற்காகவும் இச்செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புகின்ற விடயம் அமைந்துள்ளது.உள்நாட்டு பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்து சென்று தீர்வினை பெற முயல்வதும் இவர்கள் இலங்கையை சவாலுக்கு உட்படுத்தி வருகின்றனர் என்பதே ஆகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட் புர்கான் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் செவ்வாய்க்கிழமை(11) இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்;

13 ஆம் அரசியல் திருத்த சட்டத்திற்கு முஸ்லீம் கட்சிகள் ஆரம்பகாலத்தில் எதிரான போக்கு உள்ளவர்களாகவே பார்த்திருக்கின்றோம்.இரவோடு இரவாக 13 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டதன் பின்னணியில் தான் முஸ்லீம்களுக்கான அரசியல் தேவைப்பாடு ஒன்றின் அவசியம் உணரப்பட்டது.தற்போது 13 ஆம் அரசியல் திருத்த சட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் முன்னின்று அமுல்படுத்த முயல்வது முஸ்லீம் மக்களிடத்தில் வீணான நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. 1987 ஆண்டு இவ்வாறு வடகிழக்கு இணைக்கப்பட்ட நிலையில் முஸ்லீம்களுக்கு இந்த அரசியல் தேவைப்பாடு ஏற்பட்டிருந்தது.

இதன் பின்னர் தான் முஸ்லீம் அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றிருந்தன.இதில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்ற கட்சியும் உருவாக பிரதான காரணமாக அமைந்தது.இந்நிலையில் தமிழ் பேசும் கட்சிகள் சில வட கிழக்கினை இணைப்பது தொடர்பாகவும் மீண்டும் 13 ஆவது அரசியல் சீர்திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பாகவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதை அவதானிக்க முடிகின்றது.இவ்வாறான செயற்பாடுகளுக்கு மர்ஹூம் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தமை வரலாறுகள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறான நிலையில் மக்களை மூளைச்சலவை செய்யும் நோக்குடனும் தமது அரசியல் வங்குரோத்து தனத்தினை மீளவும் சரி செய்வதற்காகவும் இச்செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புகின்ற விடயம் அமைந்துள்ளது.உள்நாட்டு பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்து சென்று தீர்வினை பெற முயல்வதும் இவர்கள் இலங்கையை சவாலுக்கு உட்படுத்தி வருகின்றனர் என்பதே ஆகும்.இந்த விடயங்களை தொடர்ச்சியாகவே முன்னெடுக்கின்றனர்.இவ்வாறான பின்னணியில் மக்களின் நலனுக்காகவே அன்றி அரசியல் சுயலாபங்களுக்காகவே அக்கட்சிகள் செயற்படுகின்றன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றார்.