தென்கிழக்குப் பல்கலையில் விஞ்ஞான ஆராய்ச்சி மாநாடு!

நூருல் ஹுதா உமர்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் சம்மாந்துறையில் அமைந்திருக்கும்; பிரயோக விஞ்ஞான பீடத்தில்  “நிலையான கண்டுபிடிப்புகளுக்கான தரவு சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி” எனும் தொனிப்பொருளில் பத்தாவது வருடாந்த விஞ்ஞான ஆராய்ச்சி மாநாடு, பீடத்தின் கேட்போர் கூடத்தில் Zoom தொழினுட்பத்தினூடாகவும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பீடாதிபதி கலாநிதி யூ.எல். செய்னுடீன் தலைமையில் (30) இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டு உரையாற்றிய அதேவேளை, ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய நூலை ஏற்பாட்டுக்குழுவினர் சூழ, பீடாதிபதி உபவேந்தருக்கு வழங்கிவைத்தார். நிகழ்வின் ஏற்பாட்டாளர் கலாநிதி எம். சி. அலி பூட்டோவின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம பேச்சாளரான LIRNEasia நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ரோஹான் சமரஜீவாவை அறிமுகம் செய்துவைத்தார்.

பின்னர் “நிலையான கண்டுபிடிப்புகளுக்கான தரவு சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி” (“Data-Driven Scientific Research for Sustainable Innovations”) எனும் தலைப்பில் பேராசிரியர் ரோஹான் சமரஜீவா தனது பிரதான உரையை நிகழ்த்தினார். குறித்த விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் 8அமர்வுகளில் 44 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. முதல் அமர்வின் இறுதியில் விழாக்குழுச் செயலாளர் கலாநிதி பி.வி.எச்.கே.ரணசிங்க  நன்றியுரை நிகழ்த்தினார்.

இரண்டாவது அமர்வின்போது சிறப்புப் பேச்சாளரான ஜப்பான் Hokkaido  பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் கலாநிதி டபிள்யு.எம்.சி.சமீரவை  கலாநிதி பி.வி.எச்.கே.ரணசிங்க அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் துணைப் பேராசிரியர் கலாநிதி டபிள்யு.எம்.சி.சமீர தனது சிறப்புரையை நிகழ்த்தினார். நிகழ்வில் கட்டுரையாளர்கள் Zoom தொழினுட்பத்தினூடாக கலந்துகொண்ட அதேவேளை உபவேந்தர், பீடாதிபதி, நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட பிரதி நூலகர்  மற்றும் விரிவுரையாளர்கள் என பலரும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர்.