மன்னாரில் கொவிட் தொற்றாளர் விகிதாசாரம் அதிகரிப்பு. தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களே பொது இடங்களில் நாளாந்த நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்படுவர்

பணிப்பாளர் ரி.வினோதன்

வாஸ் கூஞ்ஞ)

மன்னாரில் கொவிட் தொற்றாளர்களின் விகிதாசாரம் அதிகரித்து வருகின்றன மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத தன்மையும் மற்றும் காலநிலை மாற்றமும் இதற்கு காரணமாகும். ஏதிர்வரும் திங்கள் கிழமை (15.11.2021) முதல் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களே பொது இடங்களில் தங்கள் நாளாந்த நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்படுவர் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் வெள்ளிக் கிழமை (12.11.2021) தனது பணிமணையில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது

மன்னார் மாவட்டத்தில் வியாழக் கிழமை (11.11.2021) மேலும் ஐம்பது பேர் கொவிற் கொற்றாளர்களாக அடையளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 45 பேர் ஆன்டிஜென் பரிசோதனைகள் மூலமாகவும் 05 பேர் பி.சி.ஆர் பரிசோதனை மூலமாகவே கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 09 பேர் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் 08 பேர் நானாட்டான்  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் அடம்பன் வைத்தியசாலைகளில் தலா 06 பேரும் நானாட்டான் வைத்திசாலையில் 05 பேரும், வங்காலை வைத்தியசாலையில் 04 பேரும், முருங்கன், பெரிய பண்டிவிரிச்சான், மற்றும் விடத்தல்தீவு ஆகிய வைத்தியசாலைகளில் தலா 02 பேரும் தலைமன்னார் வைத்தியசாலையில் ஒருவருமே கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களோடு சேர்த்து இந்த மாதம் (நவம்பர்) 11 தினங்களும் 240 பேர் கொவிட் தொற்றோடு அடையாளம் காணப்பட்டுள்ளனர். சராசரியாக 21 பேர் நாளொன்றுக்கு மன்னாரில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் மொத்தமாக 2618 பேரும் மன்னார் மாவட்டத்தில் இதுவரையும் மொத்தமாக 2635 பேரும் கொவிட் தொற்றாளர்களாக பதிவுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த மாதம் (நவம்பர்) மேலும் 02 பேர் கொவிட் தொற்றாளர்களாக இறந்ததைத் தொடர்ந்து இதுவரை மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 25 கொவிட் தொற்றாளர்கள் மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

கொவிட் மரண வீதமானது இவ் மன்னார் மாவட்டத்தில் 0.95 ஆக காணப்படுகின்றது.

இதேவேளை கொவிட் தொற்று அதிகரிப்புக்கு பிரதான காரணமாக மக்கள் அதிகமாக வெளியில் நடமாடுவது சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்காது செயல்படுவது மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் குறிப்பிடப்பட்ட ஆளணிகளுக்கு மேலாக இணைந்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கின்றது.

மேலும் தற்பொழுது மன்னாரிலுள்ள காலநிலை வைரஸ் பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலையாக காணப்படுவதால் மக்கள் கட்டாயம் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.

அதேவேளை நிகழ்வுகளை ஒழுங்கு செய்பவர்கள் சுகாதார அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றே நிகழ்வுகளை ஒழுங்கு செய்ய வேண்டிய நிலை உருவாகியிருக்கின்றது.

அத்தோடு இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே எதிர்வரும் திங்கள் கிழமை (15.11.2021) முதல் வியாபார நிலையங்கள் சந்தைகள் பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றில் நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவர்.

அத்துடன் தற்பொழுதுள்ள காலநிலை மழை வீழ்ச்சி காரணமாக டெங்கு தொற்று நோய் பரவும் அபாயமும் மன்னார் மாவட்டத்தில் உருவாகியுள்ளது.

குறிப்பாக வீடுகள் மற்றும் வீடுகள் சூழல் உள்ள இடங்களில் வெள்ளநீர் தேங்கி காணப்படுகின்றது. ஆகவே மக்கள் இதுவிடயத்திலும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை இனம் கண்டு உடன் அவற்றை இல்லாது ஒழித்து நுளம்பு தாக்கத்திலிருந்து ஒவ்வொரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியமாகின்றது.

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 89 சத வீதமானோர் முதலாவது தடுப்பூசிகளையும் 71.9 சத வீதமானோர்  இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இதனைத் தவிர மொத்தமாக 5573 பாடசாலை மாணவர்களுக்கும் 492 பேருக்கு பூசர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன. 768 பேருக்கு பாடசாலையிலிருந்து இடை விலகியவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என இவ்வாறு தெரிவித்தார்