சாய்ந்தமருது வீதிகளை 110 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்கிறார் அதாஉல்லா எம்.பி

ஆரம்ப வேலைகளையும் தொடக்கி வைத்தார்

மாளிகைக்காடு நிருபர்

கிராமிய வீதி மற்றும் அத்தியவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் நிதியொதுக்கீட்டில் சாய்ந்தமருது பிரதேசத்தில் புனரமைப்பு செய்யப்படவுள்ள வீதிகளுக்கான உத்தியோகபூர்வ அங்குராப்பண வைபகம் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் திங்கட்கிழமை மாலை தேசிய காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுமார் 110 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நடைபெறவுள்ள இந்த அபிவிருத்தி திட்ட ஆரம்ப நிகழ்வில் உலமாக்கள், இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினரும், சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஆசிரியர் ஏ.ஆர்.ஏ. அஸீஸ், ஏ.ஆர்.எம். அஸீம், எம்.எம்.றிஸ்மீர், சாய்ந்தமருது ஜும்மாப்பள்ளிவாசல் தலைவர் ஏ. ஹிபதுல் கரீம், செயலாளர் அப்துல் மஜீத் ரோஷன், தேசிய காங்கிரஸின் பிரதம பொருளாளர் வஸீர் எம் ஜுனைட், தேசிய காங்கிரசின் மாளிகைக்காடு அமைப்பாளர் யூ.எல்.என். ஹுதா, உயர்பீட உறுப்பினர் எம். சபான், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியலாளர் ஏ.எம். றியாஸ், தொழிநுட்ப உத்தியோகத்தர், கல்முனை காரியாலய பிரதம இலிகிதர் ஏ.சி.எம். நிஸார் உட்பட ஊர் பிரமுகர்கள், பொலிவேரியன் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பள்ளிவாசல் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது புதிதாக காபட் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாவடிப்பள்ளி வண்டு வீதியை பார்வையிட்டதுடன் சாய்ந்தமருதில் அமையவுள்ள புதிய கட்டிடங்கள் தொடர்பிலான ஆலோசனை மட்டும் திட்ட வரைபுகள் தொடர்பிலும் களவிஜயம் செய்து பார்வையிட்டதுடன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.