அடிப்படைவசதிகளற்ற கிராமத்தை நோக்கி நகர்ந்த மாஹீரின் மக்கள் பணி : அறபா நகரில் கல்விக்கான விதை போடப்பட்டது.

மாளிகைக்காடு நிருபர்

இறக்காமம், குடிவில் பிரதேச அறபா நகரில் சுமார் 33 குடும்பங்கள் எந்தவித அடிப்படைத் வசதிகளுமின்றி மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அந்த பிரதேசத்தில் பாலர் பாடசாலை ஒன்றின் தேவை நீண்டகாலமாக உணரப்பட்டிருந்த நிலையில், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் பங்களிப்பினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட  பாலர் பாடசாலையைத் திறந்து வைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் பாலர் பாடசாலைக்குத் தேவையான தளபாடங்கள், கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டதோடு  ஆசிரியை ஒருவரும் நியமிக்கப்பட்டு அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை சம்பளத்தினை மாதா மாதம் வழங்கவும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் ஐ.எல்.எம் மாஹிர், தொழிநுட்ப அதிகாரி ஏ.ஆர். இர்ஷாட், குடிவில் பிரதேச கிராம நிலதாரி எம்.ஜே.எம். அத்தீக், மீனவர் சங்கத் தலைவர் சப்றாஸ், அறபா நகர் தலைவர் அமீன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க மிக விரைவாக பாலர் பாடசாலை அமைத்துக் கொடுத்து அதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த ஐ.எல்.எம். மாஹிர் அவர்களுக்கும் இவ் வேலைத் திட்டங்கள் முழுமையடைய பாடுபட்ட தொழிநுட்ப அதிகாரி ஏ.ஆர். இர்ஷாட் அவர்களுக்கும் குடிவில் பிரதேச அறபா நகர் மக்கள் இதன்போது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.