இரு நாட்டுத் தூதுவர்கள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுடன் சந்திப்பு!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

கொவிட் சூழ்நிலையின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நோர்வே மற்றும் நெதர்லாந்து நாட்டு தூதுவர்கள் இன்றைய தினம்  விஜயமொன்றினை மேற்கொண்டு பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை அவரது மட்டக்களப்பிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்தி விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளார்கள்.

நோர்வே நாட்டு தூதுவர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல் ( Trine Joranli Eskedal), நெதர்லாந்து நாட்டு தூதுவர் டஞ்ஜா கொங்கிரிஜ்ப் (Tanja Gonfgrijp) ஆகிய இருவரும்  இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது குறித்த கலந்துரையாடலின் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள், அபிவிருத்திப் பணிகள் மற்றும் அரசியல் சார்ந்த செயற்பாடுகள் போன்றவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்தோடு எமது மக்களுக்கு தேவைப்பாடாகவுள்ள பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல், நிலையான வாழ்வாதார வழிவகைகள் மற்றும் கிராமிய மட்ட உட்கட்டமைப்பு  விடயங்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடியுள்ளதுடன் இவற்றிற்கான சாதகமான பதில்களை இரண்டு நாட்டு தூதுவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.