எப்.முபாரக்
திருகோணமலை வரதோயநகரை சேர்ந்த புனர்வாழ் வளிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் துப்பாக்கி முனையில் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.
வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி முனையில் மனோகரதாஸ் சுபாஸ் 39 என்ற நபரை கடத்திச்சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடத்தப்பட்ட குடும்பஸ்தரின் குடும்பத்தவர்கள் இது குறித்து தெரிவித்துள்ளதாவது.
இன்று(28) காலை ஆறுமணிக்கு நாங்கள் நல்லநித்திரையிலிருந்தோம், இரண்டுபேர் வெளியில நின்றாங்கள் சுற்றிவளைத்து வீட்டிற்குள் வந்து இவரை கூப்பிட்டு எடுத்தவங்கள்- வெளிக்கிடுங்க என சொன்னார்கள்.
நாங்கள் என்னத்திற்கு என கேட்க,சந்தேகமாகயிருக்கு விசாரித்துபோட்டுத்தான் விடுவம் என்று சொன்னார்கள்.
உண்மையிலேயே அவர் அப்படிப்பட்ட ஆள் இல்லை.
இவர் இரண்டுவருடம் புனர்வாழ்வில் இருந்து விடுதலை செய்யப்பட்டுதான் வந்திருக்கின்றார்.
இண்டைக்கு வந்து அவரை கூட்டிக்கொண்டு போக முயலேக்க நாங்கள் விடேல்ல எங்களை பேசி எல்லாம் ரைபிளை கொண்டுவந்து மிரட்டிதான் அவரை கொண்டுபோறாங்கள்..
எங்க கொண்டுபோறீங்க எதாலை வந்தனீங்க என்று கேட்க தெரிவிக்கேல்லை,பிறகுதான் ஒரேயொரு ஆள் அவர் கொஞ்சம் வயசானவர் அவர்தான் உப்புவெளி பொலிஸில் இருந்துதான் வாரம் அங்குதான் கொண்டுபோறம் என சொன்னவர்.
நாங்கள் உடனடியாக வெளிக்கிட்டு உப்புவெளி பொலிஸிற்கு வந்தம்,உப்பு வெளி பொலிஸில் வந்து கேட்கேக்க அவங்கள் சொல்லுறாங்கள் அப்பிடியான ஆள நாங்கள் கொண்டுவரவில்லை என்று.எங்களிற்கு ஒருத்தரையும் தெரியாது என் சொல்லிட்டாங்கள்.
பிறகுநாங்கள் திருகோணமலையில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவிற்கு வந்து விசாரிச்சு அங்கு நிற்கின்றோம்.
என்னத்திற்காக இவரை பிடிச்சாங்கள் என்பது எங்களிற்கு தெரியவேண்டும்,அதேபோல எனது கணவரை மீட்டுதரவேண்டும் என தெரிவித்தார்.