மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய பல விடயங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின்ஆட்சிக்காலத்தில் நடைபெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறினார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி.சக்திவேல் மற்றும் கணபதி கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
நல்லாட்சி அரசில் மலையக அமைச்சர்களும் இருந்தனர். அந்த அரசாங்க காலத்தில் 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்களாகிய நீங்களே குறிப்பிடுகின்றீர்கள். ஏன் இது பற்றி அப்போது கேள்வி எழுப்பவில்லை.
அதுமட்டுமல்ல மலையக மக்களுக்கு பாதகமான பல விடயங்கள் நல்லாட்சி காலத்தில் செய்யப்பட்டுள்ளன. காணிகளும் பறிபோயுள்ளன. அவ்வாறான நிலை இன்று ஏற்பட்டிருக்குமானால் இ.தொ.கா மௌனமாக உள்ளதெனவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விமர்சனங்களை முன்வைப்பார்கள்.
அதேவேளை, எமது மலையக மக்கள்மீது பற்றும் அதிகபொறுப்பும் எமது கட்சிக்கு உள்ளது. மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் களத்தில் இறங்குவோம். மக்களுக்கு உதவி செய்துவிட்டு அதனை ஊடகங்களில் பிரச்சாரம் நாங்கள் பிரச்சாரம் செய்யமாட்டோம்.
அதேபோல விமர்சன அரசியலை அன்று முதல் இன்றுவரை நாம் செய்தது கிடையாது. ஆனால் காங்கிரஸை விமர்சிக்காமல் சிலரால் அரசியல் நடத்தமுடியவில்லை.
700 வீடுகளை கடந்த ஒரு வருடத்துக்குள் கட்டிமுடித்துள்ளோம். முன்னைய ஆட்சியில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்துகொடுக்கப்படாத வீடுகளுக்கு அவற்றையும் செய்துகொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
காணி பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். ஜீவன் மௌனமாக உள்ளார் எனவும் கூறுகின்றனர். அவர் தற்போது வெளிநாடு சென்றுள்ளார். நாடு திரும்பியதும் உரிய பதில் வழங்குவார்.
அமைச்சர்களான மஹிந்தனாந்த மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோரிடம் பால் பண்ணை அமைக்கும் விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளோம். தொழில் பேட்டைகள் வரும்போது எமது மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.