மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

(எச்.எம்.எம்.பர்ஸான்)
மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட வாகனேரி கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் எடுத்துக் கொண்ட துரித முயற்சி காரணமாக இவ் உதவி வழங்கப்பட்டது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட வாகனேரி கிராமத்தில் கடந்த 15 ஆம் திகதி ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக சுமார் முப்பது வீடுகள் சேதமடைந்ததுடன் அப் பகுதியிலுள்ள மரங்களும் முறிந்து விழுந்தன.

இவ் உதவி வழங்கும் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர்களான வை.யோகஸ்வரன், ரீ.கிருபை ராசா மற்றும் றமீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த கிராம மக்களின் நலன் கருதி இவ் உதவியை வழங்கிய கட்டார் நாட்டில் தொழில் புரியும் சமூக சேவகர் றமீஸ் என்பவருக்கு தவிசாளர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.