மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 25,000 தடுப்பு ஊசிகளில் முதல் கட்டமாக கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் 1000 தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கையானது இன்று 08.06.2021 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை வின்சன்ட் மகளீர் உயர்தர பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டது.
கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் கலந்து கொண்டு ஆரம்பித்துவைத்தார்.
மண்முனை வடக்கு பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பிரதேசத்திற்குட்பட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொலிசார் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களுக்குமாக இன்றைய தினம் 750 தடுப்பூசிகளும், ஏறாவூர் பகுதியில் முன்னுரிமையளிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு 250 தடுப்பூசிகளும் இன்றைய தினம் ஏற்றப்படவுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன், 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.எட்டியாராச்சி, மட்டக்களப்பு பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.