போதைப்பொருள் பாவித்தால் கொரோனா வரும்! கூறுகின்றார் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா.

 

(காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா) போதைவஸ்து பாவிப்பவர்கள், சிகரெட் புகைப்பவர்களுக்கு கொரோனா தொற்று அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. போதைவஸ்து பாவனையினால் அவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் இதனால் விரைவில் கொரோனா தொற்று ஏற்படும்.
இந்த பாவனைக்கு அடிமையானவர்கள் விரைவில் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்படுவார்கள். அது மாத்திரமின்றி போதைப்பாவனையால் அவர்களின் பிள்ளைகள், குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் அவலநிலை உண்டாகும் என காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.

காரைதீவுப் பிரதேச கரைவலை மீனவர்களுக்கான கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வு காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் நடைபெற்ற போது அங்கு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் அத்தியவசியமான தேவைக்கு மாத்திரம் வழங்கப்பட்ட அனுமதிகளை முறைகேடாக பாவித்துக்கொண்டு வீதிகளில் உலாவித்திரிவது, கடற்கரையில் கூடி அமர்ந்து கொண்டு அரட்டையடிப்பது போன்ற விடயங்களில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.இறுக்கமாக சுகாதார நடைமுறைகளை பேண வேண்டும் மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த கலந்துரையாடலில் கொரோனா தொற்று காலத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் மீனவர்கள் சுகாதார தரப்பினருக்கு வழங்கவேண்டிய ஒத்துழைப்புகள் தொடர்பில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ். வேல்முருகு, பொது சுகாதார பரிசோதகர் கே. ஜெமீல் ஆகியோர் மீனவர்களுக்கு விளக்கமளித்தனர்.