பாடநூல்களில்வீதி ஒழுங்கு விதிகள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்:

பொத்துவில் உப பஸ்டிப்போ தரமுயர்த்தப்படவேண்டும் என்கிறார் முஸாரப் எம்.பி.
வி.ரி.சகாதேவராஜா


நாட்டில் வீதிவிபத்துக்கள் வகைதொகையின்றி இடம்பெறுவதையும் அநியாயமாக உயிர்கள் கொல்லப்படுவதையும் காண்கிறோம்.அனைவரும் சட்டத்தை அறிந்து கொள்ள வேண்டிய வீதி ஒழுங்குகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களும் பாடப்புத்தகங்களில் உள்ளடக்கப்பட வேண்டுமென அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் முதுநபீன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:
அதிக உள்ளக மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் பொத்துவில் பிரதேசத்தில் அமைந்திருக்கும் உப பஸ் டிப்போவானது பிரதான டிப்போவாக தரமுயர்த்தப்பட வேண்டும்.


குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகை அதிகம் வசிக்கும் சம்மாந்துறை பிரதான பஸ் டிப்போவின் நிர்வாகம் மற்றும் வாகனங்கள் வேறு இடத்திற்கு நகர்த்தப்படுவதை பரிசீலனைசெய்யவேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் படி இத்தாக்குதலின் பின்னணியில் இருக்கும் சூத்திரதாரிகள் யாரோ என்பதாகவும் முஸ்லிம்களுக்கு இதில் எந்தவித தொடர்பும் இல்லை என தெட்டத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் புர்கா தடை மத்ரஸாக்களை தடை செய்தல் என அபத்தமான செயல்களில் அரசாங்கம் அரசியல் செய்ய முற்படுவதை விடுத்து அதனை சமூக விழுமியங்கள் பண்பாடு கலாச்சாரம் உரிமை என்பன பாதிக்கப்படாத வகையில் அணுக வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சாய்ந்தமருது பிரதேசம் ஸஹ்ரான் மறைந்திருந்து பயிற்சி பெற்ற இடம் என்றும் அவன் வாழ்ந்த இடம் என்றும் புரியப்படும் வகையில் வெளியிட்ட கருத்தை மேற்கோள் காட்டி குண்டுதாரிகளுடன் சம்பந்தப்பட்ட சகாக்களின் மறைவிடம் குறித்து பாதுகாப்புதுறைக்கு தகவல் தந்த ஒட்டுமொத்த சாய்ந்தமருது மக்களின் மனம் புண்படும்படியாக பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா  பேசியதை பொறுப்புள்ள வகையில் கருத்துக்களை அவர் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.