காத்தான்குடி பிரதேசத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – 2021

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், பாராளுமன்ற உறுப்பினரும், காத்தான்குடி
ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான நஷீர் அஹமட்  தலைமையில் இன்று (16) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது கடந்த ஆண்டு இப்பிரதேச செயலகப்பிரிவில் மெற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக அனுமதி கிடைக்கப்பெற வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

மேலும் இப்பிரதேசத்தின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்கள் ஆராயப்பட்டது.

அதிலும் குறிப்பாக காத்தான்குடியில் மிக முக்கிய தேவையாக இருக்கின்ற வடிகான் அமைப்பு, மனைப்பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காத்தான்குடி  பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எம்.சில்மியா, உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.தனுஜா மற்றும் சுகாதார துறையினர் உட்பட  மாவட்டத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் பிரசன்னமாயிருந்தனர்.