வாழைச்சேனைபகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்திய யானை இறந்துள்ளது.

ந.குகதர்சன்

வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட மக்கிளானை பள்ளிமடு விவசாய கண்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த யானை வியாழக்கிழமை மாலை இறந்த நிலையில் காணப்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த யானை நோய்வாய்ப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், இது தொடர்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிராந்திய காரியாலத்திற்கு தெரியப்படுத்தியதாகவும், வைத்திய அதிகாரி வருகை தரும் பட்சத்தில் யானைக்கான வைத்தியத்தினை ஆரம்பிக்க முடியும் என்று கிரான் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்திருந்த போதும் ஒருவார காலமாக வைத்தியர்கள் எவரும் வராத நிலையில் குறித்த யானை உயிரிழந்துள்ளது.

 

குறித்த யானை ஒரு வாரகாலமாக பள்ளிமடு விவசாய கண்டத்தில் வயல் நிலங்களை அழித்து செய்கை செய்யப்பட்ட சோளம் மற்றும் கச்சான் என்பவற்றை நாசம் செய்துள்ளதுடன், வயல் காவலாளியின் குடிசையையும் துவம்சம் செய்த யானையே இவ்வாறு உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

கிரான் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் குறித்தி இடத்திற்கு வருகை தந்து உயிரிழந்த யானையினை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.