திருகோணமலை-மொரவெவ பிரதேச சபையின் புதிய தவிசாளராக டபிள்யூ.ஆர்.ஜகத் குமார வேரகொட

ஹஸ்பர் ஏ ஹலீம்_
திருகோணமலை-மொரவெவ பிரதேச சபையின் புதிய  தவிசாளராக டபிள்யூ.ஆர்.ஜகத் குமார  வேரகொட   (15) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2021ம் ஆண்டிற்கான இரண்டாவது  வரவு செலவுத் திட்டம் கடந்த 15ஆம் தேதி  தவிசாளர் பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் இன்று புதிய தவிசாளர் நியமனத்திற்கான வாக்கெடுப்பு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என் .மணிவண்ணன் தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஜகத்குமாரவை தலைவராக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் சித்திரவேல் சசிகுமார் முன் மொழிய  அதே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் எம்.டி. ரத்னாயக்க வழிமொழிந்தார்.
இவரை நியமிப்பதில்  ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படாமல் இவர் ஏகமனதாக தவிசாளராக நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தாம் தலைவராக  நியமிக்கப்பட்டதையடுத்து கட்சி பேதமின்றி இன மத வேறுபாடின்றி பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஒவ்வொரு சபை உறுப்பினர்களும் தங்களது ஆலோசனைகளையும் திட்டங்களையும் எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னர் வழங்குமாறும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.