வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் கல்முனை மீனவர்களுக்கு அனுமதி மறுப்பு : ஜனாதிபதியை தலையிட கோருகின்றனர் கல்முனை மீனவர்கள் !

நூருல் ஹுதா உமர்

மீன்பிடி படகுகளை வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைப்பதில் பெரிய சிக்கல் நிலை உள்ளதாகவும்  கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதாக கூறி அப்பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மீனவர்கள் இடைஞ்சல் விளைவிப்பதாகவும் தெரிவித்து கல்முனை பிராந்திய மீனவர்கள் கல்முனையில் போராட்டம் ஒன்றை இன்று மதியம் முன்னெடுத்தனர்.

இப்போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மீனவர்கள்,

கடந்த பல வருடங்ளாக இந்த பிரச்சினை இருந்து வருகின்றது. ஆனால் இப்போது கொரோனா தொற்று காலம் என்பதால் பிரச்சினை அதிகரித்துள்ளது. எங்களுக்கென்று ஒழுங்கான மீனவ துறைமுகம் இல்லது இருப்பதை பல கட்டங்களாக போராட்டங்கள் மூலமாகவும், அரசியல்வாதிகளுக்கு மகஜர் கையளித்தும், ஊடகங்கள் வாயிலாகவும் தெரிவித்து வந்துள்ளோம். ஆனால் அது ஒன்றும் வேலைக்கு ஆனபலன் இல்லை.

இப்போது நாட்டில் பரவலாக பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் எங்களின் மீன்பிடி படகுகளை நிறுத்தி வைப்பதில் பாரிய சிக்கல் தோன்றியுள்ளது. அப்பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மீனவர்கள், மீன்பிடி அமைப்புக்கள் எங்களினால் அப்பிரதேசங்களுக்கு கொரோனா பரவி விடும் என்று அச்சம் தெரிவித்து எங்களை வாழைச்சேனை பிரதேசத்தில் நுழைய அனுமதிக்கிறார்கள் இல்லை.

இந்த தொழிலையே பிரதானமாக நம்பியிருக்கும் எங்களுக்கு வேறு வழியில்லாமல் குடும்பத்துடன் கஷ்டத்தை அனுபவித்து வருகிறோம். கல்முனை முதல் அட்டாளைச்சேனை வரை சுமார் 350 படகுகள் உள்ளது அந்த படகுகளை நம்பி 3000 குடும்பங்கள் இருக்கிறோம். எங்களுக்கு சரியான முடிவுகள் எதுவுமில்லாமல் கஷ்டப்படுகிறோம். இவ்விடயத்தில் ஜனாதிபதி கோத்தாபய, பிரதமர் மஹிந்த மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலையிட்டு உடனடியாக நல்ல தீர்வொன்றை பெற்றுத்தர  முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தவறும் பட்சத்தில் வேறுவழியில்லாமல் குடும்பத்துடன் வீதிக்கு இறங்கி போராட வேண்டியதே வழியாக இருக்கின்றது என்றனர்.