நிந்தவூரில் வீதித்தடை : கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்கிறார் தவிசாளர் !

(நூருல் ஹுதா உமர்)

காரைதீவு பிரதேச சபை- நிந்தவூர் பிரதேச சபை எல்லைகளை இணைக்கும் உள்ளகப்பாதைகள் கல்போட்டு மறிக்கப்பட்டு போக்குவரத்து தடைபோடப்பட்டுள்ளதுடன் பிரதான வீதிகளினுடாக பயணிப்போர் மீது கிருமித்தொற்று தெளிக்கும் நடவடிக்கைகள் நிந்தவூரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது பற்றி நிந்தவூர் பிரதேசசபைத் தவிசாளர் அஸ்ரப் தாஹிர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது.

கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனாத் தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் சனநெரிசலை மட்டுப்படுத்தி, வர்த்தக நிலையங்களை கட்டுப்பாடாக கொண்டு செல்ல வர்த்தகர்களை ஒலிபெருக்கிகளை கொண்டு அறிவுறுத்தி சலூன்களை மூடி எமது கிராமங்களிலாவது இதனைக் கட்டுப்படுத்தவேண்டுமெனக் கருதி இவ்வாறான வேலைத்திட்டங்ககளை முன்னெடுத்து வருகின்றோம்.

அதன் ஒரு அங்கமாகவே நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல்,  நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், நிந்தவூர் பிரதேச சபை ஆகியன இணைந்து தீர்மானம் மேற்கொண்டு இந்த வீதித் தடையைப் போட்டு சனநெரிசலை வெகுவாக குறைத்து மக்களூடாக கொரோனா பரவுதலை தடுத்து வருகிறோம். இரு கிராம மக்களையும் காப்பாற்றும் நோக்கில்தான் இத்தடையை போட்டுள்ளோம் என்றார்.