டெங்கு மீண்டும் பரவக்கூடிய அபாயநிலை ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவிப்பு.

எப்.முபாரக்  2020-11-19
டெங்கு மீண்டும் பரவக்கூடிய அபாயநிலை ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்:
திருகோணமலை  சீனக்குடா  தம்பலகாமம் மற்றும் கந்தளாய் பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கொவிட் – 19 காரணமாக டெங்கு விடயத்தில் பொதுமக்கள் கவனயீனமாக செயற்பட்டு வருகின்றனர். இதனால் தற்பொழுது டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்கள் அதிகரித்துள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக திருகோணமலை பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி தங்கவேல் நிலோஜன் கூறுகையில்:
டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்தவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையினால் சிரமதானங்கள் மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகள் போன்ற பல முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருந்த போதிலும் பொதுமக்கள் சுகாதார திணைக்களத்துக்கு தங்களது ஒத்துழைப்பை வழங்குவதுடன்  தங்களது வீடுகளையும் சுற்றுப்புற சூழல்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இதேவேளை டெங்கு பரவும் விதத்தில் செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.