உணர்வு அரசியலுக்கும், தமிழ்த் தேசியத்திற்கு இனி வடக்கு, கிழக்கில்
இடமில்லை என்று கூறியவர்களின் முகத்தில் தமிழ் மக்கள் சேறு
பூசியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்
தமிழர் தாயகப்பகுதிகளில் நேற்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டிருந்த நிலையில்,
தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள விசேட காணொளி ஒன்றிலேயே
அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
இதன்போது அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “முதலாவதாக வடக்கு, கிழக்கு
வாழ் மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்கின்றேன். உண்மையிலேயே இன்றைய தினம் எங்களுடைய மக்கள் வழங்கிய பூரண
ஒத்துழைப்பினை பார்க்கின்ற போது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
வடக்கு, கிழக்கு முழுவதும், பூரண கடையடைப்பினை மேற்கொண்டு ஹர்த்தாலுக்கு
ஒத்துழைப்பு வழங்கிய எங்களுடைய மக்களுக்கு நன்றி.
உண்மையிலேயே இந்த நிகழ்வுகளுக்கான ஆரம்பம் இரண்டு வாரங்களுக்கு முன்னர்
தியாகி திலிபனினுடைய நினைவேந்தல் தினத்தினை தடை செய்து, நான் உட்பட
எங்களுடைய வடக்கு, கிழக்கினைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களுக்கு
வழங்கப்பட்ட தடையுத்தரவிலிருந்து ஆரம்பித்த இந்த விடயம் இரண்டு
வாரங்களுக்கு அடுத்து நாங்கள் இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லாமல் அதாவது,
இந்த நாட்டில் உயிரிழந்த ஒருவரை நினைவு கூர்வதற்கு, நாட்டு மக்களுக்கு
சுதந்திரம் இல்லை, ஜனநாயகம் இல்லை என்ற வகையில் இந்த நாட்டுக்காக ஜனநாயகம்
பிரார்த்தித்து நாங்கள் சில ஆலயங்களில் செய்த மதவழிபாடுகளுக்கும்
நீதிமன்றம் ஊடாக வழங்கப்பட்ட தடையுத்தரவினை அடுத்து, இன்றைய தினம் இந்த
அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து,
இந்த ஹர்த்தாலிற்கு வடக்கு, கிழக்கு மக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்புகளை
வழங்கி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளமையினை பார்க்கும் போது
சந்தோசமாகவுள்ளது என தெரிவித்தார்.