MT NEW DIAMOND  கப்பலினை பழுது பார்ப்பதற்காகவிசேட படையணி தயார்

பாறுக் ஷிஹான்

தீ விபத்து ஏற்பட்ட MT NEW DIAMOND  கப்பலினை பழுது பார்ப்பதற்காக நிபுணத்துவமுள்ள கடற்படை விசேட படையணி தயார் படுத்தப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள கடற்படையினரின் முகாமை அண்டிய கடற் பிரதேசத்தில் வைத்து இப்படையணி  இன்று(9) மாலை அதிவேக டோரா படகு மூலம் கடற்படையின் பாரிய யுத்தக்கப்பலை சென்றடைந்து பின்னர் தீ விபத்து ஏற்பட்ட கப்பலை பார்வையிட்டு திருத்த வேலைகளில் ஈடுபடவுள்ளனர்.

இவ்வாறு  குறித்த விசேட படையணி  கல்முனை பகுதிக்கு பஸ் ஒன்றின் ஊடாக வருகை தந்தததுடன் கப்பலை பழுதுபார்ப்பதற்கான  தலைக்கவசங்கள் வெப்பத்திற்கு தாக்குப்பிடிக்கின்ற உடைகள் உபகரணங்கள் உள்ளடங்கலாக பொருட்களை காவி சென்றுள்ளதை காண முடிந்தது.

இவ்வாறு தீ பிடித்து விபத்திற்குள்ளான குறித்த கப்பலை சென்றடைவதற்கு இப்படையினருக்கு இலங்கை கரையோர காவல் படை விசேட பாதுகாப்பு வழங்கி வருவதை அவதானிக்க முடிந்தது.

 இதே வேளை  அம்பாறை கடல் கரையோரங்களில்  ஆய்வுகளை சமூத்திரிகா என்ற  நாராவின் பாரிய கப்பல் ஒன்றின் ஊடாக  ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை(8) புதன்கிழமை(9) என இரு தினங்களாக  பெரிய நீலாவணை முதல் ஒலுவில் வரை   கடல் நீர் பகுப்பாய்வு  மீனவர்களின் வாக்குமூலங்கள் மற்றும் பிடிக்கப்படும் மீன் இனங்களில் இருந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆராயப்பட்டன.

 கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அண்மித்த கடற்பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் பகுதி பகுதியாக வருகை தந்திருந்த நாரா நிறுவன அதிகாரிகளினால் அழைக்கப்பட்டு நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டது.

கப்பல் அமைந்துள்ள பகுதியிலுள்ள கடல் நீர் மாதிரியை பெற்று அதனை பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சில இடங்களில்  பிடிக்கப்பட்ட மீன்களும் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் நாரா (NARA) நிறுவனம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

எனினும் இந்த  கப்பல் தீ விபத்தின்  மூலம் நச்சுப்பொருள் வௌியேற்றப்படுகின்றதா என்பது தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் தெரியவரவில்லை என  நாரா நிறுவனத்தின்   அதிகாரி ஒருவர்  குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த நிலைமை தொடர்பில் அம்பாறை மாவட்டத்தின்  ஏனைய கடற்பிராந்தியங்களிலும் இன்று(9) ஆய்வுகள் மேற்கொள்ளபடவுள்ளன.

இதன்படி  பானம திருக்கோவில்   மற்றும் பொத்துவில்  ஆகிய பகுதிகளிலும் இவ்வாறான  ஆய்வுகளை  நாரா நிறுவனம் முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை தீ விபத்து ஏற்பட்ட MT NEW DIAMOND  கப்பலினால்  சமுத்தரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஏற்கனவே  சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையும் கடலாராய்ச்சில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை ( நாரா) நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.