தாய் ஒருவர் மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் பிரதான வீதியினை மறித்து போராட்டத்தில்

மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் பிரதான வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக இன்று மாலை அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை காணப்பட்டது .

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்லடி திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த குடும்ப பெண்ணொருவருக்கும் அவருடைய கணவனுக்குமிடையில் கடந்த சில காலமாக ஏற்பட்டுள்ள குடும்ப பிரச்சினை காரணமாக மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொள்ளாத காரணத்தினால் தொடர்ந்து இருவருக்கிடையில் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக தெரிவித்த குறித்த பெண் இதற்கான தீர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்தாக தெரிவித்திருந்தார்

25 வயதுடைய குறித்த தாய் மற்றும் , 7 ,5 ,12 ஆகிய வயதுகளுடைய மூன்று பிள்ளைகளுடன் இன்று மாலை மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் பிரதான வீதியின் மத்தில் அமர்ந்து போராட்டத்தினை மேற்கொண்டதை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை காணப்பட்டது . இதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகை தந்த காத்தான்குடி பொலிஸார் குறித்த தாயையும் இ மூன்று பிள்ளைகளையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதுடன் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்திருந்தார்

மேலும் குறித்த விடயம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டப்ளியு .எ . துமிந்த நயனசிறி தெரிவிக்கையில் குறித்த பெண்ணின் முறைப்பாடு தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்