அரசியல் ஆயுதத்தினை இளைஞர்கள் கையில் ஏந்த வேண்டிய காலம் இது.சட்டத்தரணி ந.கமலதாசன் வீடியோ

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் தமது ஆமோக ஆதரவின் மூலம் நான்கு ஆசனத்தினை பெறக்கூடிய அங்கீகாரத்தினை வழங்குவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ந.கமலதாசன் தெரிவித்தார்.

வாழைச்சேனை பேத்தாழையிலுள்ள தனது இல்லத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பிற்பாடு தமிழர்களின் உரிமை தொடர்பாக பிரச்சனை எழுந்ததன் நிமிர்த்தம் ஆரம்பத்தில் தமிழர்கள் அரசியல் ரீதியான போராட்டத்தினை நடாத்தினார்கள். அதில் ஏற்பட்ட நம்பிக்கையின்மை காரணமாக இளைஞர்கள் கொத்தளித்தார்கள்.

இதன் காரணமாக ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது மௌனித்து காணப்படுகின்றது. இதனால் எமது தமிழ் சமூகம் ஒரு நிர்க்கதியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் அரசியல் என்பது ஒரு பலமான ஆயுதம் அந்த அரசியல் ஆயுதத்தினை இளைஞர்கள் கையில் ஏந்த வேண்டிய காலம் இது. ஜனநாயக ரீதியில் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு அரசியல் என்பதை மிகவும் சிறப்பாக பயன்படுத்த முடியும் என்று என்னுள் ஏற்பட்ட நம்பிக்கையின் பலனாக நான் அரசியலில் உள்வாங்கும் நோக்கில் களமிறங்கியுள்ளேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கும் ஆதரவின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்கள் கிடைக்கக் கூடிய இயலுமை இருந்தும் கூட தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் பலத்தினை உறுதிப்படுத்த வேண்டிய தேவையானது எமக்கும், மக்களுக்கும் இன்றியமையாது காணப்படுகின்றது.

இந்த சூழ்நிலையில் மக்கள் தமது ஆமோக ஆதரவின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நான்கு ஆசனத்தினை பெறக்கூடிய அங்கீகாரத்தினை வழங்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது மூன்று கட்சிகளை ஒருங்கமைத்துக் கொண்ட கட்சியாகும். இதன் தலைமைகள் எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் அனைவரும் தீர்மானத்தினை நிறைவேற்றுவோம். அந்தவகையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி தேர்தலின் பின்னர் ஆட்சி அமைக்கக் கூடிய சூழல் இருந்தால் புதிய அரசியல் யாப்பு விடயத்தில் எங்களது வேண்டுகோளை ஏற்றுக் கொள்வார்களாக இருந்தால் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தெரிவாகும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் எடுக்கும் பட்சத்தில் அதன் முடிவை என்னால் பரிசீலிக்க முடியும் என்றார்.