கோவிந்தன் கருணாகரம்
தமிழ் மக்களின் நியாயமான ஆயுதப்போராட்டத்தினையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்தவேண்டுமே தவிர அதனை கொச்சைப்படுத்தக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கிஸ்தருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்ட மக்களுக்காக அனுஸ்டிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் நான்காம் நாள் நிகழ்வுகள் பல்வேறு இடங்களிலும் நேற்று நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கிஸ்தருமான கோவிந்தன் கருணாகரமின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவருமான பிரசன்னா இந்திரகுமார் உட்பட கட்சி உறுப்பினர்கள்,பிரதேசபையின் தவிசாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது முள்ளியவாக்காலில் உயிர்நீர்த்த உறவுகளுக்கான ஆத்மசாந்திக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்பட்ட அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய கருணாகரம்,
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்துக்கொள்ளும் முகமாக நினைவேந்தல் நிகழ்வையும் நினைவுகூற வேண்டும் என்பதற்காக எமது மாவட்ட அலுவலகத்தில் இந்த நினைவேந்தலை நடத்திக்கொண்டிருக்கின்றோம்.
இந்த மனிதப் படுகொலை எவராலும் மறக்க முடியாததாகும்.எமது வருங்கால சந்ததி கூட இந்த அவலத்தை வருடந்தோறும் நினைவுகூற வேண்டும். எமது விடுதலைப் போராட்டம் முப்பது வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று 2009ஆம் ஆண்டு மேமாதம் மௌனிக்கப்பட்டது. இருந்தும் நாங்கள் விடுதலை அடையவில்லை. எமது மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கவில்லை. எதிர்வரும் காலங்களில் எமது மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய ஒரு நிலையை நாங்கள் ஏற்படுத்த வேண்டும்.அதற்காக நாங்கள் ஜனநாயக ரீதியாக போராடவேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
இந்த முள்ளிவாய்க்கால் அவலம் உலகின் எந்தவொரு நாட்டிலும் நடைபெறாத ஒருஇலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் மேலான மனித உயிர்கள் படுகொலை செய்யப்பட்ட, குறிப்பிட்ட ஒருசில நாட்களுக்குள் நடந்தேறிய சம்பவமாகும். வருடந்தோறும் பல மாவட்டங்களிலும் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுவருவதுடன் இந்த அவலம் நடைபெற்ற இடத்திலே மக்கள் கூடி இறந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்திவந்த இந்த நிகழ்வானது இம்முறை நடைபெறாததையிட்டு வேதனையுடன் இந்த நிகழ்வை மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலயத்தில் விரும்பி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்களினால் நினைவுகூறப்படுகின்றது.
கடந்த ஒருவாரமாக தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக பேசப்பட்டுவருகின்ற விடயமாகும். இவ்விடயம் தொடர்பில் நான் இதுவரை கருத்து கூறவில்லை.எங்கள் இயக்கத்தின் தலைவர் கருத்துக் கூறியிருந்தார். உபதலைவர் பிரசன்னா இந்திரகுமார் அவர்கள் எமது காரியாலயத்தில் கருத்துக் கூறியிருந்தார்.
உண்மையில் இந்த ஆயுதப் போராட்டமானது தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக நடைபெற்றது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்பட்டதன் விளைவாக முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ்த் தலைவர்கள் அகிம்சை ரீதியாக போராடி உண்ணாவிரதமிருந்து, ஊர்வலங்களை நடத்தி, அடிவாங்கி எத்தனையோ இனக்கலவரங்களை சந்தித்து பல உயிரிழப்புகள், பொருள் இழப்புகளுக்குப் பின்பு ஆயுதப் போராட்டம் தான் ஒரே வழி என்ற காரணத்தினால் நாங்களாக விரும்பி ஏற்றுக்கொள்ளாமல் இந்த ஆயுதப் போராட்டம் எங்கள் மீது திணிக்கப்பட்டது.
மிதவாதக் கட்சியான தமிழரசுக் கட்சி 1976ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் அத்துடன் தொண்டமான் தலைமையிலான தொழிலாளர் காங்கிரஸ_டன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை 1976ல் வட்டுக்கோட்டையில் ஆரம்பித்து வட்டுக்கோட்டை தீர்மானத்தை எடுத்;தபோது தமிழீழம் தான் ஒரே தீர்வு என்ற தமிழீழப் பிரகடனத்தை பிரகடனப்படுத்தியபோது அதற்கு ஆயுதப் போராட்டத்தி;ன் மூலமே அதனை பெற முடியுமென அவர்களே கூறியிருந்தார்கள். ஆயுதம் ஏந்தியவர்கள் அதனை தாங்களாக விரும்பி ஏற்கவில்லை என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
எமது தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அவர்களுக்கு 1981,1982ஆம் ஆண்டுகளிலே நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை விதித்தபோது நாங்கள் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்லர் என்ற கருத்தை அவர் கூறியிருந்தார்.
ஆயுதம் தூக்கியவர்கள் பைத்தியக்காரர்கள் அல்லர். எமது இனத்தின் விடுதலைக்காகவும் எமது இனம் சுதந்திரமாக தங்களை தாங்களே ஆளவேண்டும், சுயநிர்ணய உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காகவே அகிம்சைப் போராட்டம் கைகொடுக்காத பட்சத்திலே ஆயுதப் போராட்டத்தை நாடினோம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
நானும் 1983ஆம் ஆண்டிலே பயிற்சி எடுக்கும் முன்பு ஆயுதப்போராட்ட இயக்கத்துடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு இன்று 38ஆண்டுகள் கடந்திருக்கின்றன. என்னைப்போல எத்தனை போராளிகள் போராடினார்கள், இழப்புக்களை சந்தித்திருக்கின்றனர். முள்ளிவாய்க்கால் அவலத்தின்பின்பு நாங்கள் இன்று நிர்க்கதியாக நிற்கின்றோம். எமது ஆயுதப் போராட்டத்தின் மூலமே இந்த நாட்டில் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர் என்ற விடயம் சர்வதேசத்திற்கு தெரியவந்தது.
ஐக்கிய நாடுகள் சபை இலங்கை தமிழ் மக்கள் மத்தியிலே கரிசனை காட்டத் தொடங்கியிருக்கின்றது. 13ஆவது திருத்தச்சட்டம் என்று கூறக்கூடிய இலங்கை-இந்திய ஒப்பந்தம் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றதென்றால் அது ஆயுதப்போராட்டத்தின் மூலமாகவே கிடைத்த வரப்பிரசாதமாகும். ஆயுதப் போராட்டம் சரியானதா தவறானதா என்று கதைக்க வேண்டிய சூழ்நிலை இதுவல்ல. ஆயுதப்போராட்டத்தில் இருந்தவர்களை ஒருவருக்கொருவர் பிடிக்கவில்லை என்று கூறலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக ஆயுதப் போராட்டம் பிழையென்று கூறுவதற்கு இந்த நாட்டிலோ அல்லது வேறெந்த நாட்டிலோ எவருக்குமே அருகதையில்லை. ஏனென்றால் ஆயுதப்போராட்டம் எதனால் உருவானது என்பது தெரியாதவர்களே இதைப்பற்றி கூறுவார்கள்.
தான் ஐந்து வயதிலே கொழும்பிற்குச் சென்றதாகவும் சிங்கள மக்களுடன் வாழ்வது தனக்கு அதிஷ்டம் என்றும் சுமந்திரன் கூறியிருக்கின்றார். ஆயுதப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து உருவாகிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை விடுத்து சிங்களப் பிரதேசத்திலே கொழும்பிலே ஏதாவது ஒரு கட்சியுடன் இணைந்தோ அல்லது தனித்தோ போட்டியிட்டு சிங்கள மக்களுடன் அவர் வாழலாம் என்பது எனது கருத்தாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் பிரதிநிதியாக வடகிழக்கிலே இருக்கின்றது.2001ஆம் ஆண்டிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகும்போது அனைத்துப் போராட்ட இயக்கங்களும் மிதவாதக் கட்சிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி இணைந்துதான் உருவாக்கப்பட்டது. தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்பதற்கமையவே உருவாக்கப்பட்டது.
அதன் பேச்சாளராக இன்றிருக்கும் சுமந்திரன் அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் எமது ஆயுதப் போராட்டத்தையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் நியாயப்படுத்த வேண்டுமே தவிர ஆயுதப் போராட்டம் பிழையானது என்று கூறக்கூடாது.
ஆயுதப்போராட்டம் நியாயமானது என்று ஒரு காலத்திலே சிங்களப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வடமாகாண யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்கள் அழகான முறையில் சிங்கள மக்களுக்கு விளங்கப்படுத்தியிருக்கின்றார். அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கின்ற சுமந்திரன் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்த வேண்டுமே தவிர கொச்சைப்படுத்தக் கூடாது என அவரிடம் வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.